- அமைச்சர்
- எம்.பி சமினாதன்
- சென்னை
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் கலாச்சாரத்துறை
- சென்னை அரசு அருங்காட்சியகம்
சென்னை: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் இன்று (10.10.2023) மாலை 6.00 மணியளவில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் அவர்கள் தலைமையில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் சே.ரா.காந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் மரபு வழி கலைஞர்கள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (ஓவியம்), ல.ராதாகிருஷ்ணன் (சிற்பம்), மற்றும் த.வை. முருகன் (சிற்பம்) ஆகியோருக்கும், நவீனபாணி கலைஞர்கள் மு.இராமலிங்கம் (ஓவியம்). மு.வேலாயுதம் (சிற்பம்) மற்றும் ஆ.லோகநாதன் (Abulb) ஆகியோருக்கும் கலைச்செம்மல் விருது மற்றும் விருதுத் தொகையாக தலா ரூ.1,00,000/- வழங்கப்பட்டன.
மாநில அளவிலான கலைக்காட்சிக்காக ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 225 கலைப் படைப்புகளின் கண்காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் இன்று 10.10.2023 தொடங்கி வைக்கப்பட்டு, இக்கண்காட்சியில் இடம் பெறும் கலைப் படைப்புகளில் சிறந்தவற்றை உருவாக்கிய 30 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூ.15,000/-மும், 20 இளம் கலைஞர்களுக்கு தலா ரூ.10,000/-மும் என மொத்தம் ரூ.6,50,000/- பரிசுத் தொகை வழங்கப்பட்டன.
இவ்விழாவில் 10 கலையாசிரியர்கள் மற்றும் 3 சிறந்த கலை நூலாசிரியர் என 13 கலையாசிரியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.10,000/- வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் 11.10.2023 முதல் 15.10.2023 வரை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இவ்விடத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் இளைஞர் கலை விழா கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலைச்சங்கமம் கலை நிகழ்ச்சிகள் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது
The post ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் appeared first on Dinakaran.